பாரம்பரியமும் புதுமையும் ஒருங்கே அமையப்பெற்ற எழில்மிகு சிற்றூர்
மன்னங்காடு என்று அழைக்கப்படும் எங்கள் சிற்றூர் பட்டுக்கோட்டையிலிருந்து நேராக கிழக்கில் சுமார் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் அமைந்துள்ள பட்டுக்கோட்டை வட்டத்தின் தலைநகரான பட்டுக்கோட்டை நகரம் எங்களுக்கு மிக அருகில் உள்ள பெரிய பொருளாதார மையமாகும். தஞ்சாவூர் மாவட்டம் உள்ளடக்கிய எட்டு வருவாய்க் கோட்டங்களில் பட்டுக்கோட்டை வட்டம் ஒன்றாகும்.
விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட இக்கிராமம் வளமான வண்டலும், நிலத்தடி நீரும், இயற்கை வடிகாலும் அமையப் பெற்றது. கிணறு, நீர்நிலைகளுடன் இணைந்து செயற்கையாக அமைக்கப்பட்ட வாய்க்கால்கள் பாசனம் மற்றும் உயிரினங்களுக்குத் தேவையான நீரை வழங்குகின்றன. இக்கிராமத்தின் மேட்டுப்பகுதிகளில் மக்கள் குடியிருப்பும், தாழ்வுப் பகுதிகளில் நீர்நிலைகளும், விளைநிலங்களும் உள்ளன. மக்கள் வசிக்கும் மேட்டுப்பகுதிகளில் தென்னை, மா, பலா, புளி, வாழை, எலுமிச்சை போன்ற புஞ்சை பயிர்களும், சுற்றியுள்ள நிலங்களில் நெல், வேர்க்கடலை, உளுந்து, சோளம் போன்ற நஞ்சை பயிர்களும் பருவத்திற் கேற்றாற்போல் விளைவிக்க படுகின்றன.
பல்வேறு தரப்பு மக்களும் ஒருங்கிணைந்து வாழும் இவ்வூர் ஒரு முற்போக்கான கிராமத்திற்கான உள் கட்டமைப்புக்களாகிய பள்ளி, தபால், சாலை, குடிநீர், தகவல் தொடர்பு மற்றும் அனைத்து வசதிகளையும் பெற்றிருக்கிறது. மாநில சாலைத்தடம் 66 இக்கிராமத்தின் நடுவில் வடக்கு தெற்கில் செல்கிறது. இச்சாலையே வெளியூர்களுடன் தொடர்புகொள்ள பயன்படுத்தப்படும் முதன்மை வழித்தடமாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 25 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மன்னங்காடு கிராமம் தஞ்சை மாவட்டத்தின் தென் கோடியில் புவி வரைபடத்தில் 10º25’ வடக்கு & 79º23’ கிழக்கு எனும் அட்ச, தீர்க்கக் கோடுகள் இணையுமிடத்தில் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி பல வளமான கிராமங்கள் அமைந்துள்ளன. அவை, வடக்கிலிருந்து வலப்புற வரிசையில், காசாங்காடு, தெற்கு வாட்டாகுடி, அத்திவெட்டி, பிச்சினிக்காடு, தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, கள்ளிக்காடு ஆகும். காட்டாறும் நீர்நிலைகளும் மன்னங்காடு கிராமத்திற்கு மேற்கிலும் கிழக்கிலும் அமைந்துள்ளதால் அப்பக்கங்களில் உள்ள கிராமங்களுக்கு நேரடி சாலை வழிகள் இல்லை. ஆயினும், வடக்கில் காசாங்காடு, தெற்கில் துவரங்குறிச்சி ஆகியவற்றுடன் சாலைத் தொடர்புகள் உள்ளன.
பரந்துவிரிந்துள்ள மன்னங்காடு கிராமத்தின் மொத்தப் பரப்பளவு, அரசு மதிப்பீட்டின்படி 620.4 ஹெக்டேர் அல்லது 1533 ஏக்கர் ஆகும். உள்ளூர் வழக்கத்தில் கூறினால் 227.5 வேலி பரப்பளவு எனலாம். பேச்சு வழக்கில் பெரியவர்கள் கூறும்போது மன்னன்காட்டின் பரப்பு 240 வேலி என்பர். 2001 அரசு கணக்கெடுப்பின்படி மன்னங்காடு 2619 மக்களைக் கொண்டிருந்தது. தற்போதய மக்கள் தொகை சுமார் மூவாயிரத்துக்கு மேல் இருக்கும்.